காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.

Special Correspondent

அதற்கேற்ப தொடக்க நாளான வியாழக்கிழமை பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு புதிய சாதனையுடன் முதல் தங்கத்தை வென்றார். ஆடவர் பிரிவில் பி.குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

2-வது நாளான வெள்ளிக்கிழமையும் பளுதூக்குதலில் இந்திய வீரர்கள் தங்கள் முத்திரையை பதித்தனர். சஞ்சிதா சானுவுக்கு தங்கம்: பெண்கள் 53 கிலோ எடைப்பிரிவில் சஞ்சிதா சானு ஸ்நாட்ச் பிரிவில் 84 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 108 கிலோவும் என மொத்தம் 192 கிலோ தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். இது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கமாக அமைந்தது.

ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் லேதர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். தீபக் லேதர் மொத்தம் 295 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார்.

இந்நிலையில் இன்றும் பளு தூக்குதலில் தங்க வேட்டை நடத்தியது இந்திய அணி. தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். இது இவருடைய இரண்டாவது காமன்வெல்த் கேம்ஸ் தங்கமாகும். 2014-ல் நடந்த போட்டியிலும் அவர் தங்கம் வென்றார். இன்று மொத்தமாக 317 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.

இதையடுத்து சதீஷ் சிவலிங்கத்துக்குத் தமிழக முதல்வர் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். தங்கம் வென்று தமிழகம், இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள் என்று முதல்வர், சதீஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.