பிரபல நடிகர் அமீர்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி வசூலை அள்ளி குவித்த இந்திப்படம் ‘தங்கல்’. தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயிரா வாசிம் (வயது 17).

Special Correspondent

சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற இவர், ‘சீக்ரட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

காஷ்மீரை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் ‘ஏர் விஸ்டாரா’ என்ற தனியார் விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு பயணம் செய்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் சாயிராவின் பின் இருக்கையில் நடுத்தர வயதை சேர்ந்த ஒரு ஆண் பயணம் செய்தார். அவர், தனக்கு முன் உள்ள இருக்கையில் இருந்த சாயிராவுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது தொடர்பாக சாயிரா ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் தனக்கு விமான பயணத்தின்போது நேர்ந்த கதியை மிகுந்த வேதனையுடன் விவரித்தார்.

அப்போது அவர் பல நேரம் மனம் உடைந்து போனார்.‘‘இது ஒரு பயங்கரமான அனுபவம், இப்படிப்பட்ட தருணங்களில் நாம் நமக்கு நாமேதான் உதவிக்கொள்ள வேண்டும். யாரும் உதவிக்கு வர மாட்டார்கள்’’ என்று வேதனையுடன் கூறினார்.‘‘இப்படி யாருக்கும் நடக்கக்கூடாது, நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இப்படியெல்லாம் நடந்தால் எப்படி பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பீர்கள்? இப்படி உணர்கிற நிலை இனி யாருக்கும் வரக்கூடாது. இது பயங்கரமானது’’ என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தெரிய வந்தவுடன் ஏர் விஸ்டாரா விமான நிறுவனம், நடிகை சாயிரா வாசிமிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத அந்த விமான பயணி மீது மும்பை சாஹர் போலீசார், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354 (மானபங்கம்) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், சாயிராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மும்பையைசேர்ந்த தொழிலதிபர் என தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தொழிலதிபரின் பெயர் விகாஸ் சச்தேவ் என்பதாகவும். 36 வயதான அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று மும்பை துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.