நடிகர் சங்கத் தேர்தலில், சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட முந்தைய நடிகர் சங்க நிர்வாகிகள் செய்த முறைகேடுகளை முன் வைத்து தேர்தல் களத்தில் இறங்கிய நாசர், விஷால், பொன்வண்ணன் தலைமையிலான பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றது.

Special Correspondent

நடிகர் விஷால், நடிகர் சங்கத்தை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் களமிறங்கி வெற்றி கண்டார். அப்போதே நடிகர் சங்கத்தில் சிறிய விரிசல் விழுந்தது. இருந்தாலும் அது பெரிதாகாத அளவுக்குப் பார்த்துக்கொண்டனர்.

இந்நிலையில், விஷால் சமீபத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் களமிறங்கினார். அவர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும், சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அவரது செயல் பிடிக்கவில்லை.

விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஷாலுக்கு எதிராக நடிகர் சேரன், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி வகித்துக்கொண்டு தேர்தலில் நிற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் நடிகர் சங்க நலன் பாதிக்கப்படும் என நிர்வாகிகள் கருதுகின்றனர். இதன் காரணமாக பொன்வண்ணன் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன், தான் ராஜினாமா செய்வதாக நடிகர் சங்கத்திற்கு கடிதம் கொடுத்திருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொன்வண்ணன், கடந்தவாரமே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்ட நிலையில், அவரின் ராஜினாமாவை நிர்வாகிகள் ஏற்காமல் தொடர்ந்து அவரிடம் பேசி வந்தனர். ஆனால் பொன்வண்ணன், ராஜினாமா செய்வதில் உறுதியாக இருக்கிறார்.

விஷாலின் ஆர்.கே.நகர் தேர்தல் பிரவேசம் காரணமாக, தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்னை ஏற்பட்டது. சேரன், டி.ராஜேந்தர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஓர் அணியாகத் திரண்டு விஷாலை எதிர்த்து வருவதுடன், நேற்று தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்திலும் பெரிய ரகளையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இப்போது நடிகர் சங்கத்திலும் இதே பிரச்னையை முன் வைத்து விரிசல் உருவாகி உள்ளது. நடிகர் சங்கச் செயலாளர் பதவி வகித்துக்கொண்டு விஷால் தேர்தலில் போட்டியிட நினைத்தது தவறு எனக் கூறியிருக்கிறார் பொன்வண்ணன்.

விஷால் தொட்டதெல்லாம் வெற்றி மயம் எனப் பேசும் அளவுக்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். பலம் மிக்க பாண்டவர் அணி உடைந்த நிலையில் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் நேரத்தில் எல்லோரும் கட்டையைப் போடுவது விஷாலுக்கு 'கிலி'யை உண்டாக்கி இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்...