தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டுமே 50 பேர்கள் உயிரிழந்துள்ளனர். முதல்வர் பழனிசாமி தொகுதியான எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமே இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Special Correspondent

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட சுகாதாரத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை, டெங்கு காய்ச்சல் குறித்து எந்தவித விழிப்புணர்வும் நடத்தவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 10 மாத பெண் குழந்தை அஜிராபிவி, பழனிகுமார் என்பவர் 10 வயது மகன் பாலமுருகன் மற்றும ஆண்டுரணியில் 19 வயது பெண் கிலாடின் சோபியா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் முத்துராஜ் என்பவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மோகன்ராஜ் என்ற 19 வயது இளைஞர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் டெங்குவால் சிகிச்சைப்பேற்று வந்த முருகன் என்பவர் உயிரிழந்தார்.

முன்னதாக டெங்கு காய்ச்சலுக்கு, 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 400 பேர் இறந்து இருக்கலாம் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதும் குறிப்பிடத்தக்கது

டெங்கு காய்ச்சலை தொடர்ந்து மூளை மற்றும் பன்றி காய்ச்சலும் அச்சுருத்தியுள்ளது. ஆவடி அருகே திருமுல்லைவாயலில் பன்றி காய்ச்சல் அச்சுருத்தலால் குணவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி மானஷா மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார்.

மேலும் கள்ளிகுறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னபொண்ணு என்பவர் மர்மகாய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 35 பேர் இறந்துள்ளனர். பல்வேறு காய்ச்சல் காரணமாக 50 பேர் இறந்துள்ளனர். டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. சுகாதார பணியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். டெங்குவுக்கு 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து 10 ஆயிரம் பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று கூறியுள்ளார்.