முன்னதாக வடகிழக்கு மாநிலமான அசாமில் ஜோர்கட் என்ற மத்திய ரிசர்வ் படை முகாமில் பணியாற்றி வரும் பங்கஜ் மித்ரா என்ற வீரர் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

Special Correspondent

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த வீடியோவில் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.

இந்த சூழலில் பங்கஜ் மித்ரா மீண்டும் ஒரு வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். சரியாக உணவு கூட கொடுக்காமல் உயர் அதிகாரிகள் ஓய்வின்றி வேலை வாங்கி வாட்டி வதைக்கின்றனர்.

வீரர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரதம் தொடங்கியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரமும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய ரிசர்வ் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் கடும் குளிர் நிறைந்த பனி பிரதேசத்தில் பணியாற்றும் தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர் இந்தாண்டு தொடக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் வீரர்களுக்கு காய்ந்த சப்பாத்தியும், வாயில் வைக்க முடியாத பருப்பும் குழம்பும் என வாட்டி வதைக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது.

துணை ராணுவ படையில் வீரர்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளால் மத்திய அரசுக்கு தர்மசங்கடமான சூழல் எழுந்துள்ளது.