மதுரையை சேர்ந்த ஜெயன் என்பவர் கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்திலுள்ள சிங்கவனம் மற்றும் பல்லம் பகுதியில் துணிகளை சேகரித்து இஸ்திரி போட்டு கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார்.

Special Correspondent

சுமார் 20 வருடங்களாக இவ்விரு கிராமங்களின் ஆஸ்தான இஸ்திரிக்காரர் இவர் தான். இதனால் அனைவருடனும் தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கம் இவருக்கு ஏற்பட்டது.

சிங்கவனம் கிராமத்தில் மனைவி மாரியம்மாளுடன் ஜெயன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளாக ஜெயன் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்படத் தொடங்கினார்.

அதிலும் கடந்த இரு வருடங்களில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் வீட்டிலேயே முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, சுமார் ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். ஆனால், சிறு வாடகை வீட்டில் வசிக்கும் ஜெயனுக்கு அதை அளிக்க வசதி கிடையாது. இதை அறிந்த கிராம மக்கள் ஜாதி, மதம், மாநிலம் போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இரு கிராமத்தை சேர்ந்த தன்னார்வலர்களும், வீடு வீடாக சென்று ஜெயன் சிகிச்சைக்காக நிதி திரட்டினர்.

'ஜெயன் ஃலைப் சேவிங் சமித்தி' என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, வங்கி கணக்கு துவக்கப்பட்டு, அதில் நிதி சேமிக்கப்பட்டது.

கோட்டையத்திற்கு உட்பட 5 வார்டுகளில் சுமார் 2500 வீடுகளுக்கு சென்று ஜெயன் சிகிச்சைக்காக நிதி திரட்டப்பட்டது. ஜெயன் சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் தேவைப்பட்ட நிலையில், மக்களின் ஆதரவால், 11.25 லட்சம் நிதி சேர்ந்துள்ளது.

தினக்கூலி தொழிலாளர்கள் ஒருநாள் சம்பளத்தை இதற்காக அளித்து நெகிழச் செய்தனர். நடுத்தர வர்க்கம், ஏழைகள், பணக்காரர்கள் என அனைத்து தரப்பினருமே மனமுவந்து நிதி உதவி அளித்தனர். ஒவ்வொருவரிடமும், ரூ.50 முதல் ரூ.25000 வரையிலும் நிதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயனுக்கு நவம்பர் மாதம் இடது கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. ஜெயனின் மனைவி மாரியம்மாள், தனது கணவருக்காக கிட்னி தானம் செய்ய உள்ளார்