மியான்மாரின் வடக்குப் பகுதியிலுள்ள ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்யா சமூகத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் வங்காளதேசத்திலிருந்து கிளம்பி மியான்மாரில் குடி பெயந்தனர்.

Special Correspondent

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி சுமார் 10 லட்சத்துக்கும் மேலான மக்கள் மியான்மரில் கடந்த 2012-ம் ஆண்டில் அங்கிருக்கும் ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட பல்வேறு மோதல்களுக்கு பிறகு மியான்மார் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மியான்மாரிலுள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்யா போராளிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மியான்மர் ராணுவம் ரோஹிங்யா மக்களை வேட்டையாட ஆரம்பித்ததும் அங்கிருந்து சுமார் 3.70 லட்சம் மக்கள் மியான்மாரை விட்டு வெளியேறி மீண்டும் வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

வங்காளதேசத்தில் தஞ்சமடைந்து வரும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளதால், அவர்களுக்கு 14000 முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து அவர்கள் கூறும் போது ரோஹிங்யா அகதிகள் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பும்வரை அரசு ஏற்படுத்திய முகாம்களில் தான் தங்க வேண்டும் என்றார்கள்.

மியான்மரில் நடக்கும் வன்முறையால் உயிர் வாழ முடியாத சூழல் இருப்பதால் இந்தியாவில் தங்க அனுமதி கேட்டு ரோஹிங்யா இஸ்லாமியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரோஹிங்யா அகதிகளில் சிலருக்கு பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு உள்ளது எனவும் அவர்களை இந்தியாவில் தங்க அனுமதிப்பது தேசத்திற்கு மிக பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக திங்களன்று இந்தியாவின் தஞ்சம் புகுந்துள்ள 40,000 ரோஹிங்ய இன முஸ்லிமகளை மியான்மர் திருப்பி அனுப்பும் வேலையில் இந்திய அரசு மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்ளவதாக ஐ நா மனித உரிமை ஆணையாளர் ஸிய்டு அல் ஹுசைன் கண்டித்துள்ளார்.