கடந்த வியாழன் இரவு பனாரஸ் பல்கலை வளாகத்தில் விடுதிக்கு சென்றுகொண்டிருந்த கலைப்பிரிவு மாணவி ஒருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். இதைத்தடுக்க அந்த மாணவி கூச்சலிட்டதில், அவர்கள் அந்த இடத்தைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

Special Correspondent

இந்த சம்பவம் நடந்தபோது கல்லூரி பாதுகாவலர்கள் மிக அருகில் இருந்தும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதுகுறித்து விடுதி கண்காணிப்பாளரிடம் அந்த மாணவி புகாரளித்தபோது, ‘நீ எதற்காக தாமதமாக விடுதிக்கு வந்தாய்?’ என கேள்வியெழுப்பியுள்ளார். இதையடுத்து சக மாணவிகளிடம் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்ததை அடுத்து, பலமுறை பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இது தெரிந்தும் பல்கலை. நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, இதைக் கண்டுகொள்ளாத பல்கலை. நிர்வாகத்தைக் கண்டிக்கும் விதமாக மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் பனாரஸ் துணைவேந்தரின் வீட்டை முற்றுகையிட முயன்றபோது, காவல்துறையினர் தடியடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பல மாணவிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இன்னமும் பல்கலைக்கழகத்தில் இயல்பு நிலை திரும்பாத நிலையில், 28ஆம் தேதி முதல் அறிவிக்கப்படும் தசரா விடுமுறை மூன்று நாட்கள் முன்கூட்டியே இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.