மிகச்சிறந்த முறையில் அகழாய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொல்லியல் துறை கண்காணிப்பாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.

Special Correspondent

கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட பொக்கிஷங்களை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தார்கள். அப்போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 6.1.2017 அன்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மங்கேஷ் சர்மா அவர்களுக்குக் கடிதம் எழுதி, “அகழ்வராய்ச்சி பணிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது”, என்று வேண்டுகோள் விடுத்தேன். இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர், “அகழ்வராய்ச்சி பணிகள் நிறுத்தப்படாது”, என்று உறுதியளித்தார்.

ஆனால் மத்திய அமைச்சரின் உறுதிமொழியை மீறி, இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீராமன், “மூன்றாவது கட்ட அகழ்வராய்ச்சி பணியில் வேறு எந்தப் பொருட்களும் கிடைக்க வாய்ப்பில்லை.

ஆகவே அகழாய்வுப் பணி நிறுத்தப்படும்”, என்று கூறியிருப்பதும், “அப்படி நிறுத்தப்படுவதற்கு அதிகாரி மாற்றம்தான் காரணம் என்பதை நான் நம்பவில்லை”, என்று தமிழக அமைச்சர் திரு. பாண்டியராஜன் பேட்டியளித்திருப்பதும் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

அகழாய்வுப் பணிக்குப் போதிய நிதி ஒதுக்காமல், தொல்லியல் துறை அதிகாரியை திடீரென இடமாற்றம் செய்து, புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி மூலம், “முந்தைய அகழாய்வில் கிடைத்தப் பொருட்களின் தொடர்ச்சிக் கிடைக்கவில்லை”, என்று ஒரு பேட்டியை கொடுக்க வைத்து, அகழாய்வுப் பணிகளை முற்றிலும் சீர்குலைக்கவே மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு விரும்புகிறது. அதற்கு இங்குள்ள ‘குதிரை பேர’ அரசும் துணை போகிறது.

குறிப்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையே, “தமிழக அரசையும் சேர்த்து இந்த அகழ்வராய்ச்சியை நடத்த வேண்டும்”, என்று தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டும், மத்திய அரசின் அதிகாரியொருவர், “மூன்றாவது கட்டப் பணிகளை நிறுத்தப் போகிறோம்”, என்று தன்னிச்சையாகக் கூறுவது ஆணவப் போக்காக அமைந்துள்ளது.

2200 ஆண்டுகளுக்கும் முன்பான தமிழர்களின் பண்டைய நாகரிகம், கட்டிடக் கலைகள் போன்ற அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்ட ஒரு அகழாய்வு பணியில், இவ்வளவு குழப்பங்களை மத்திய தொல்லியல் துறை ஏதோ தன்னிச்சையாக செய்கிறது என்பதை நம்ப நான் தயாராக இல்லை.

மேற்கண்டவாறு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.