ஆசிரியர்கள் காந்தி, பூமிநாதன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து, முனைவர்பட்ட ஆய்வாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் களஆய்வு செய்தனர். இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது.

Special Correspondent

புதிய கற்காலம் கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலானது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில் வழுவழுப்பான கற்கருவிகள், கையாலும், சக்கரத்தாலும் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினான்.

வைகை ஆற்றில் இருந்து 2கி.மீ. தூரத்தில் உள்ள இப்பகுதி காத்தான் ஓடை மூலம் ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.போகலூரில் கிடைத்த கற்கோடரி புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. இதன் நீளம் 7 செ.மீ. அகலம் 5.5 செ.மீ. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். இதன் மேல்பகுதியில் சிறு சிறு துளைகள் உள்ளன. இது அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இதன் அகன்ற வெட்டும் பகுதி கூர்மையானதாகவும், குறுகிய பகுதி கூர்மை குறைந்தும் உள்ளது. மரத்தாலான தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். இங்கு கிடைத்த அரைப்புக்கற்கள் புதிய கற்காலம் முதல் தானியங்களை அரைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

ஒரு கருப்பு சிவப்பு பானை ஓட்டில் ‘த’ என்னும் தமிழ் பிராமி எழுத்து போன்ற குறியீடும், மற்றொன்றில் திரிசூலக் குறியீடும் உள்ளன. இவை 2000 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்தவை.

இங்கு புதிய கற்காலக் கருவியோடு இரும்புக்கால, சங்ககால பானை ஓடுகளும் கிடைப்பதன் மூலம் புதிய கற்காலம் முதல் சங்ககாலம் வரை பல ஆயிரம் ஆண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதியாக இது விளங்கியுள்ளதை அறியமுடிகிறது.

புதிய கற்காலக் கருவிகள், வட தமிழ்நாட்டில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தென் தமிழ்நாட்டில் சமயநல்லூர், கீழடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன.

புதிய கற்காலக் கருவி தென்மாவட்டங்களில் மிகஅரிதாகவே கிடைப்பதால் இதன் பழமையை மேலும் தெரிந்துகொள்ள இப்பகுதியில் தொல்லியல் துறை அகழாய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.