ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என்பதா? இதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தடியடியில் காயம் அடைந்தவர்கள் ஆவேசமாக கூறினர்.

Special Correspondent

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 22-ந்தேதி நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறினார். ரஜினிகாந்தின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலீஸ் தடியடியில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ரஜினிகாந்த் கருத்து குறித்து ஆவேசமாக பதிலளித்தனர்.

தேவர் காலனியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் முதலில் பேட்டி கொடுத்து விட்டு, அதன்பிறகு பணம் கொடுத்து இருந்தால் அந்த பணத்தை வாங்கி இருக்க மாட்டோம். எங்களிடம் நன்றாக பேசிவிட்டு, ஆஸ்பத்திரிக்கு வெளியில் இப்படி பேட்டி கொடுத்தது வருத்தம் அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய எங்களை சமூக விரோதிகள் என்பதா? இதற்கு அவர், வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

தடியடியில் காயம் அடைந்த பிளஸ்-2 முடித்த மாணவி பினோலின் பிரியங்கா கூறுகையில், “நாங்கள் அமைதியான முறையில் போராடினோம். போராட்டத்துக்கு சிறு குழந்தைகளையும் அழைத்துச் சென்றோம். வன்முறையில் ஈடுபடுவதாக இருந்தால் நாங்கள் குழந்தைகளை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும். எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த், சமூக விரோதிகள் என்று கூறியுள்ளார். இது தேவை இல்லாத வார்த்தை. இந்த மனநிலையில் அவர் எங்களை சந்தித்து இருக்க கூடாது. போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்கிறார் ரஜினிகாந்த். போராட்டம் நடத்தினால்தான் தமிழகம் நல்ல மாநிலம் ஆகும். எங்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

10-ம் வகுப்பு மாணவி டிசானி கூறுகையில், “நான் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளேன். ரஜினிகாந்த் சாரை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எனது முதுகில் தட்டிக்கொடுத்து பேசினார். ஆனால், ஆஸ்பத்திரிக்கு வெளியே சென்ற பிறகு, எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் என்று கூறியுள்ளார். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள்தான் போராடினோம். சமூக விரோதிகள் யாரும் போராடவில்லை. நாங்கள் குடும்பமாக சென்றுதான் போராடினோம். அந்த வார்த்தையை அவர் கூறியிருக்க கூடாது. அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

திரேஸ்புரத்தைச் சேர்ந்த எடிட்சன் கூறுகையில், “கடந்த 22-ந்தேதி நடந்த சம்பவத்தின்போது போலீசார் என்னை கைது செய்து வல்லநாடு, புதுக்கோட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் வைத்து இருந்தனர். அதன்பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். தடியடி சம்பவத்தில் எனக்கு காயம் இருப்பதால் நான் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளேன். ரஜினிகாந்தின் இந்த கருத்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சமூக விரோதிகள் யாரும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடவில்லை. போராட்டம் நடந்தால்தான் நல்ல தமிழ்நாடு உருவாகும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் நாங்கள் இதைவிட வேகமாக போராடுவோம். எங்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று ஆவேசமாக கூறினார்.

தொடர் செய்திகள்